Saturday, November 9, 2013

சோழர்களுக்கும் மேலை சளுக்கதுக்குமான பகை – பகுதி மூன்று

ராஜேந்திர சோழருக்கு பிறகு சோழ சிம்மாசனத்தில் அமர்ந்தவர் ராஜாதி ராஜர். தந்தையின் ஆட்சிக்காலத்தில் சோழர்களின் படைகளுக்கு தலைமை வகித்து போர்களில் எண்ணற்ற வெற்றிகளை வாரி குவித்தவர். சோழ நாடு கண்ட மாபெரும் வீரர்களுள் ஒருவர். தனது ஆயுட்காலம் முழுதும் போர்களிலே செலவிட்டவர். ராஜேந்திரரின் கங்கை மற்றும் கடார படையெடுப்புகளுக்கு பிறகு சோழர்களின் எதிரி பட்டியல் மேலும் நீண்டது.


ராஜாதி ராஜர் இரண்டாம் முறையாக சோமேஸ்வரன் தலைமையிலான சளுக்க படைகளை கம்பிலி நகரத்தில் சந்தித்தது. சோழப்படைகளின் முன் சளுக்க படைகள் சிதறிட, சோழ சைன்யம் கம்பிலி நகரத்தை துவம்சப்படுத்தியது. இப்போர் நடைப்பெற்ற ஆண்டு 1044-1046 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


மூன்றாம் முறையாக சோமேஸ்வரனின் சிறிய படைகளை புன்டுர் அல்லது புந்தூர் பகுதிகளில் சந்தித்தது. சோமேஸ்வரின் சேனாதிபதிகள் மற்றும் படைத்தலைவர்களை சிறை பிடித்ததோடு மட்டுமல்லாமல் புந்தூர் நகரத்தையும் படைகள் துவம்சம் செய்தது சோழப்படைகள். மேலும் சோழப்படைகள் உக்கிரமாக முன்னேறி சளுக்கர்களின் அன்றைய தலைநகரான கல்யாணபுரம் எரியூட்டப்பட்டதுடன் இப்போர் முடிவுக்கு வந்தது. இதற்கு பிறகு ராஜாதிராஜர் விஜய ராஜேந்திரன் என்னும் அபிடேகப்பெயரை புனைந்து வீராபிஷேகம் புரிந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. இந்த போர் 1048 ஆண்டு நடைப்பெற்றது.


இப்போர் பற்றி நீலகண்ட சாஸ்திரிகளின் சோழர்கள் புத்தகம் ஒரு அறிய தகவலை நமக்கு அளிக்கிறது. குடந்தையில் உள்ள தாராசுரம் கோவிலில் உள்ள துவாரபாலகர் சோழர்களின் கலைக்கு மாறாக வித்தியாசமாக இருக்குமெனவும் இச்சிலை கல்யாணபுரத்தை எரியூட்டியபிறகு ராஜாதிராஜரால் அங்கிருந்து கொணரப்பட்டது என்று கூறுகிறது.


மீண்டும் ஆகவமல்லன் தலைமையிலான சளுக்க படைகள் சோழப்படைகளை கொப்பத்தில் சந்தித்தது. மிகவும் உக்கிரமாக நடைப்பெற்ற இப்போரில் சளுக்க படைகள் ராஜாதிராஜர் அமர்ந்து வந்த யானையை குறிவைத்து தங்களது போர் வியூகத்தை அமைத்து போரிட சோழ சக்கரவர்த்திகள் ராஜாதிராஜ சோழர் உயிர் நீத்தார். தனது வாழ்க்கை முழுதும் போரில் செலவிட்ட ஒரு மாபெரும் வீரனுக்கு ஏற்ற முடிவு (வீரமரணம்) ராஜாதிராஜருக்கு கிட்டியது.

 

போர்க்களத்தில் தங்களது சக்ரவர்த்திகள் உயிர் நீத்ததை அடுத்து சோழப்படைகள் சிதற ஆரம்பித்தன. இதை பயன்படுத்திக்கொண்ட ஆகவமல்லனின் படைகள் சோழப்படைகளை வீழ்த்த தொடங்கின. தனது தமையனுடன் போர்க்களம் வந்திருந்த இரண்டாம் ராஜேந்திரர் சோழர்களின் பின்னடைவை பார்த்துவிட்டு படைகள் சக்ரவர்த்திகள் இல்லாததனால் தடுமாறுகிறது என்பதை உணர்ந்து போர்க்களத்திலேயே சோழ மாமன்னராக முடி சூடிக்கொண்டார். படைகளை அஞ்ச வேண்டாம் என்றும் வெற்றி நமதே என்றும் படைகளை முன்னின்று நடத்தினார். தோல்வியின் விளிம்பிலிருந்த சோழப்படைகள் அசுர வேகத்தில் வெற்றியை நோக்கி நடந்தது.

 

     எனினும் சோழர்களின் இந்த வெற்றி தற்காலிகமானதே என்பது ஆகவமல்லனின் கல்வெட்டுகள் துங்கபத்திரை நதிக்கரை வரை கிடைக்கப்பெறுவது உறுதி செய்கிறது. இந்த தீராப்பகை அடுத்து ஆட்சி பொறுப்பேற்கவிருக்கும் வீர ராஜேந்திரரின் ஆட்சியில் முடிவு காணவிருக்கிறது. அந்த இறுதி பகுதி அடுத்த பதிவில்..


அனைத்து விவரங்களும் K.A.நீலகண்ட சாஸ்திரிகளின் “சோழர்கள் புத்தகத்திலிருந்தும் சதாசிவ பண்டாரத்தாரின் “பிற்கால சோழர்கள் சரித்திரம் புத்தகத்திலிருந்தும் எடுக்கப்பட்டவையே.

 

புத்தகங்களில் படைத்தலைவர்கள், சேனாதிபதிகள் போன்றோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தாலும் அப்பெயர்களை கூறி வாசகர்களை குழப்ப எனக்கு விருப்பமில்லை. இப்போதைக்கு ஒரு மேலோட்டமாகவே எனது வலைப்பதிவுகள் இருப்பது எனக்கு நல்லது என்று தோன்றுகிறது. என்னை விட எனது வலைப்பூக்களை படிக்கும் வாசகர்களுக்கு மிகவும் நல்லது என்று எனது மனசாட்சி கூறுகிறது. J


தொடரும்..