Tuesday, October 21, 2014

கிண்டில் பேப்பர்வைட்டில் படிக்கும் அனுபவம் (A Reading Experience on Kindle Paperwhite)

வெகு நாட்களாக தமிழ் புத்தகங்களை மட்டுமே வாசித்து வருகிறோமே. அதுவும் குறிப்பாக வரலாற்று புதினங்களை மட்டுமே படித்து வருகிறோமே .. எப்பொழுதுதான் ஆங்கில புத்தகங்களை வாசிக்க தொடங்குவது. நமது வாசிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமே என்று சிந்தித்து வந்தேன். ஏற்கனவே வாங்கிய தமிழ் புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கே ஒரு அலமாரி முழுவதும் ஆகிவிட்டது. இதற்கே வீட்டில் பல்வேறு வசவுகளும் திட்டுகளும் விழுந்து வருகின்றன. இதில் ஆங்கில புத்தகங்களையும் வாங்க தொடங்கிவிட்டால் அவ்வளவுதான்.

என்னதான் செய்வது என்று முழி பிதுங்கியது. அலுவலகத்தில் சக நண்பனிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது அவன் கிண்டில் (Kindle) எனப்படும் மின்கருவியை (Electronic Device) பற்றி கூறினான். என்னை போன்ற புத்தக புழுக்களுகாக உருவாக்கப்பட்டிருக்கும் கருவி என்றான். ஆயினும் எனக்கு திருப்தி வரவில்லை. அதிகமாக படிக்கும் வழக்கம் உள்ள எனக்கு அக்கருவியை அதிகம் பார்த்தால் கண்களுக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்று பயம்.  ஏற்கனவே எட்டு மணி நேரம் கணினியுடன் எனது கண்கள் சீரழிகின்றன. இதில் இது வேறா என்று நினைத்தேன்.

நீண்ட நெடிய சிந்தனைக்கு பிறகு எவ்வளவோ பாத்துட்டோம்!! கழுத இதையும் பாத்துடுவோம்!!என்று முடிவு செய்தேன். இதற்கிடையில் எனது நண்பன் அவனது கிண்டிலை கொண்டுவந்து காண்பித்தான். ஓரளவிற்கு திருப்தி ஆக இருந்தது. மீண்டும் மீண்டும் குழப்பி கொண்டால் எடுத்த முடிவில் இருந்து விலகி விடுவோம் என்று அடுத்த இரு நாட்களில் அமேசான்(Amazon) வலைத்தளத்தில் மட்டுமே கிடைக்ககூடிய அரிய வகை பொருளான கிண்டில் பேப்பர் வைட்டை (Kindle Paperwhite) ஆர்டர் செய்தேன்.. :)

அடுத்த நாளே எனது கையில் கிண்டில் தவழ தொடங்கியது. வாங்கிய புதிதல்லவா. இருக்கும் ஆப்ஷன்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். கத்தி போய் வால் வந்த கதையாக இதை என்னமாக வாங்குவாய் என்று வீட்டில் அப்பாவும் அம்மாவும் கேட்டார்கள். எப்படியோ சமாளித்து விட்டேன். நாக்கு தள்ளிவிட்டது.

இரு நாட்களுக்கு பிறகு கிண்டில் வாங்கிவிட்டோம். என்ன புத்தகத்தை படிப்பது என்ற கவலை தொடங்கியது. முதலில் ஏதாவது புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி படிக்க வேனும். அப்பொழுதுதான் கொடுத்த காசுக்காச்சும் படிப்போம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் அதற்கு முன் இது தமிழ் எழுத்துகளை சப்போர்ட் செய்யுமா என்று டெஸ்ட் செய்து விடுவோம் என்று Project Madurai இணையதளத்தில் இருந்து பொன்னியின் செல்வனை பதிவிறக்கம் செய்து அதை கன்வெர்ட் செய்து படித்து பார்த்தேன். அடடா!! அப்படியே பேப்பரில் படிப்பது போல் இருந்தது. ஆனால் புது புத்தகம் வாங்கியவுடன் அதில் வீசும் வாசம் இதில் தெரியாது என்பது ஒரு குறையே!! :P
  
முதலில் விலை கொடுத்து வாங்கப்போகும் அந்த புத்தகம் என்ன என்று மண்டை காய்ந்தது. சிறிய வயதில் இருந்தே மால்குடி டேஸ் புத்தகத்தை படிக்க வேண்டும் என்று அவா. சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் இருக்கிறது என்று பாத்துடுவோம் என்று 117 ருபாய் கொடுத்து  Malgudi Days - Short Stories From An Astrologer's Day என்னும் புத்தகத்தை வாங்கி வாசிக்க தொடங்கினேன். வாசிப்பதற்கு மிகவும் வாட்டமாகவும் வசதியாகவும் கிண்டில் இருக்கிறது. கிண்டிலில் படிப்பதும் ஒரு சுகமாகத்தான் இருக்கிறது இது வரை. புத்தகங்களின் எடையை விட இதன் எடை குறைவல்லவா.

மால்குடி விமர்சனம் அடுத்த பதிவில்.. 

Tuesday, October 7, 2014

சோழர் கால நாணய அளவீடுகள் - பகுதி ஒன்று (Coin Measures of Cholas - Part One)

நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய சோழர்கள் புத்தகத்தை படித்து கொண்டிருந்த பொழுது சோழர்களின் நாணய அளவீடுகள் பற்றி படித்தேன். அதை பற்றி ஒரு பதிவை எழுதுவோம் என்று தோன்றியதன் விளைவே இந்த பதிவு. மற்றபடி என்னுடைய மூளையை கசக்கி பிழிந்து எழுதியதல்ல. சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு ஈயடிச்சான் காப்பி :)

சோழர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் இரு வகையான நாணய வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதலாம் வகை கட்யனா (Gadyana) என்று அழைக்கபெறும் நாணயவகை. இதன் எடை 3.75 கிராம் முதல் 3.9 கிராம் வரை இருக்கும். புத்தகத்தில் இதன் எடை 58 grain முதல் 60 grain வரை இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு grain என்பது சுமார் 65 மில்லிகிராம் (Milligram) இருக்கும். உத்தம சோழரின் காலத்தை சேர்ந்த ஒரு நாணயத்தின் எடை 50 grain முதல் 60 grain வரை இருந்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது உண்மையானால் இந்த நாணயம் கட்யனா வகையை சார்ந்தது என்று கூறலாம்.

ஆனால் சோழர்கள் அதிக அளவில் பயன்படுத்திய நாணய எடைமுறை கழஞ்சு (Kazhanju) என்பதாகும். இந்த நாணய முறை முதலாம் பராந்தக சோழர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். ஒரு கழஞ்சு என்பது 5 கிராம் தங்கத்துக்கு சமானம். (1 kazhanju = 5 grams of Gold)

கழஞ்சு என்னும் எடைமுறையில் இருந்து வந்த மேலும் சில எடைமுறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

1)  மாஞ்ஞாடி (Manjaadi)
      இருபது  மாஞ்ஞாடிகள்  என்பது ஒரு கழஞ்சுக்கு சமானம் ஆகும்.
                           1 Kazhanju = 20 Manjaadi

2)  பணவெடை (Panavedai)
       ஐந்து பணவெடை என்பது ஒரு கழஞ்சுக்கு சமானம் ஆகும்.
                           1 Kazhanju = 5 Panavedai
                           4 Manjaadi = 1 Panavedai

3) குன்றிமணி (Kundrimani)
      குன்றிமணி என்பது இன்றளவும் நமது வழக்காடு மொழியில் இருந்து வருகிறது. உனக்கு குன்றிமணி அளவு கூட தங்கம் கிடையாது என்று வழக்கு மொழியில் கூறுவதுண்டு.
       ஒரு குன்றிமணி என்பது அரை மாஞ்ஞாடிக்கு நிகரானது. அதாவது 40 குன்றிமணி சேர்ந்தது ஒரு கழஞ்சு.
                           1 kundrimani = 0.5 maanjadi
                           40 kundrimani = 1 kazhanju
                         
4) நல் எடை (Nal Yedai)
     இறுதியாக மிக சிறிய எடையான நல் எடை. ஒரு நல் எடை என்பது கால் குன்றிமணிக்கு சமமான எடையாகும்.
                          1 nal yedai = 0.25 kundrimani
                          160 nal yedai  = 1 kazhanju

ராஜ ராஜ சோழரின் 31 ஆம் ஆண்டு கல்வெட்டொன்று மதுராந்தக மடை என்னும் நாணய எடையை குறிப்பிடுகிறது. இந்த கல்வெட்டு முதலாம் ராஜ ராஜரின் காலத்தவையாக இருப்பின் இந்நாணயங்கள் உத்தம சோழர் காலத்தில் அச்சிடப்பட்டவயாக இருக்கும் என்று கூறலாம். உத்தம சோழரின் மற்றொரு பெயர் மதுராந்தகர் என்பது குறிப்பிடத்தக்கது. மடை என்னும் நாணயம் ஒரு கழஞ்சின் மொத்த எடையான 5 கிராம் தங்கத்தையும் ஒரே நாணயத்தில் வார்க்க பெற்றிருக்கும். அதாவது ஒரு மடை நாணயத்தில் 5 கிராம் தங்கம் இருக்கும்.

ஒரு மடை நாணயத்தின் பாதியே ராஜ ராஜன் காசு என்றழைக்கப்பட்டுள்ளது. இந்த காசு முதலாம் ராஜராஜரின் காலத்தவை. ஆனால் காசு என்னும் இந்த நாணயம் என்பது முதலாம் ராஜராஜரின் காலத்திற்கு முன்பே நடைமுறைக்கு வந்துவிட்டது என்று நீலகண்ட சாஸ்திரிகள் கூறுகிறார். இந்த மடை என்பது பல்வேறு கல்வெட்டுகளில் அன்றாட பழங்காசு, பழங்காசு, அன்றாட நற்காசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜேந்திர சோழர், குலோத்துங்க சோழர் ஆகியோர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணய எடைகள் மற்றும் சோழர்களின் நாணய எடை முறையில் இலங்கையின் தாக்கம் ஆகியவை அடுத்த பதிவில்...

தொடரும்...