Saturday, June 14, 2014

பொன்னியின் செல்வன் நாடகம் ஒரு விமர்சனம் - II (Ponniyin Selvan Drama Review Part 2)

முதல் பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
http://southindianhistory-india.blogspot.in/2014/06/i.html

சென்டர் ப்ரெஷ் விளம்பரத்தில் "இட்லி, பூரி, மசால் தோசை" என்று வரிசையாக ஒருவர் கூறுவாரே. அவர்தான் பார்த்திபேந்திர பல்லவனாக நடித்திருந்தார். நாடகத்தின் இறுதி பகுதி அவருடைய முழு திறமையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. அவர் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது அவர் வாள் பயிற்சி செய்யும் பொழுது தெரிகிறது.

நாடகத்தின் டைட்டில் கதாப்பாத்திரமான பொன்னியின் செல்வனாக நடித்திருப்பவரும் ஒரு புதியவரே. பொன்னியின் செல்வர் அறிமுகமாகும் வாள் சண்டை காட்சியில் கைத்தட்டல்களும் விசில் சத்தங்களும் காதை கிழிக்கின்றன. ஆனால் அவருடைய பாத்திரம் வெறும் அரை மணிநேரத்திற்கும் குறைவாகவே வருகிறது. எனினும் புத்தகத்தில் விவரித்திருந்தது போலவே மிகவும் அழகான ஒருவரை நாடக குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர்.

நதிகள் அனைத்தும் கடலை நோக்கி ஓடுவது போல நாடகம் ஆதித்ய கரிகாலனின் கொலையை நோக்கியே ஓடும். ஆதித்ய கரிகாலனாக நடித்திருப்பவர் நடிகர் பசுபதி. கட்டியம் கூறுபவர் ஆதித்ய கரிகாலன் பராக் பராக் என்று கூறி முடித்து பசுபதி வரும் முன்னரே அரங்கத்தில் உள்ளவர்கள் விசில் அடிக்கின்றனர். ஆதித்ய கரிகாலனின் பாத்திரம் புத்தகத்தில் சில நேரமே வந்தாலும் அவர் பேசும் வசனங்கள் மூலம் அவருடைய தன்மையை கல்கி வெளியிட்டிருப்பார். அதே போல் பசுபதி சில நேரமே வந்தாலும் தன்னுடைய நடிப்பினால், வசன  உச்சரிப்பால் கவர்கிறார்.

மற்ற கதை மாந்தர்களான நந்தினி, வானதி , குந்தவை , பழுவேட்டரையர், செம்பியன் மாதேவி, சுந்தர சோழர், பூங்குழலி, பிரம்மராயர், சேந்தன் அமுதன், ரவிதாசன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர் திறம்பட நடித்திருக்கின்றனர். அவர்களை பற்றி எழுதினால் நீண்டு கொண்டே போகும் என்பதால் ஒரே வரியில் சுருக்க வேண்டியதாகிற்று.

அரங்க மேடை தொடக்கத்தில் மிக சாதரணமாக தோன்றினாலும் போக போக தோட்டா தரணியின் கலை நுணுக்கங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. அதுவும் யானை நம்மை வியப்பின் உச்சிக்கே செல்லவைக்கிறது, வந்தியதேவனும் பூங்குழலியும் படகில் செல்லும் காட்சிகளில் இயக்குனரின் திறன் பளிச்சிடுகின்றது.

ஒரு புத்தகத்தை அதுவும் 60 வருடங்களாக வாசகர்களிடம் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு புத்தகத்தை நாடகமாக எடுக்கும் பொழுது ரசிகர்கள் ஒரு விதமான எதிர்ப்பார்ப்புகளுடன் வருவர். அவர்களை 3 1/2 மணி நேரத்தில் திருப்தி படுத்துவது என்பது மிகவும் கடினம். ஆனால் நம்மை 3 1/2 மணி நேரம் கட்டி போடுகின்றனர் நாடக குழுவினர். பாராட்டினால் மட்டும் போதாது என்றே தோன்றுகிறது.

வெறும் 6 மாதத்தில் திரைக்கதை அமைத்து வசனங்கள் எழுதி, பயிற்சி எடுத்து இந்த நாடகத்தை அமைத்ததாக குழுவினர் கூறினர். மிகவும் ஆச்சர்யம்தான். அவர்களுடைய முயற்சி பொன்னியின் செல்வனுடன் மட்டும் நின்று விடக்கூடாது. மேன்மேலும் முயற்சி செய்து இன்னும் சில நாவல்களை நாடகமாக்கி எங்களை மேலும் மகிழ்விக்கவேண்டும் என்பதே என்னை போன்ற புத்தகப்புழுக்களின் அவா.

பொன்னியின் செல்வன் நாடகம் ஒரு விமர்சனம் - I (Ponniyin Selvan Drama Review - Part 1)

எப்பொழுதும் போல் அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் இறங்க வேண்டிய இடம் வந்தது. நிறுத்தத்தில் ஒரு விளம்பரம். எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் வழங்கும் "பொன்னியின் செல்வன்" என்று. முழு நாவல் 3 1/2 மணி நேர நாடகமாக என்று போட்டிருந்தது. அடுத்த நாள் வெளிவந்த ஆனந்த விகடன் புத்தகத்தை மொபைலில் படித்து கொண்டிருந்த பொழுது பொன்னியின் செல்வன் நாடகம் அரங்கேறுவதை ஒட்டி சில பரிசு போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தது. எனது சக நண்பர்கள் இருவரிடம் கேட்ட பொழுது வர ஒப்புக்கொண்டனர். அதை அடுத்து டிக்கெட்டுகளை வலைத்தளத்தில் புக் செய்தோம். நாங்கள் புக் செய்யும் போதே சனி மற்றும் ஞாயிறுக்கான டிக்கெட்டுகள் காலியாகிருந்தன. எனவே வெள்ளி கிழமை அப்படியே அலுவலகத்தில் இருந்து சென்று விடலாம் என்று புக் செய்தோம்.

அந்த நாளும் வந்தது. அலுவலகத்தில் வழக்கம் போல் ஒரு பொய்யை கூறிவிட்டு சீக்கிரம் கிளம்பினோம். வண்டிகளை பார்க் செய்வதற்குள் எங்களுக்கு நாக்கு தள்ளிவிட்டது. அரங்க வாயிலில் சில பல தகவல்கள் புத்தகத்தை பற்றியும் சோழர்களின் வாழும் கோவில்களை பற்றியும் சில புகைப்படங்களும் சில தகவல் பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. "ஏட்டு!!! ஏற்கனவே லேட்டு" என்று என் உள்மனம் கூறியதால் அரக்க பரக்க அரங்கத்திற்குள் ஓடினோம்.

நண்பர்களுடன் படம் பார்க்கையில் இது வரை படத்தின் டைட்டில் போடுவதை பார்த்ததே இல்லை. இதிலும் அப்படியே. உள்ளே அடித்து பிடித்து நுழையும் போதே நாடகம் ஆரம்பித்து 10 நிமிடங்கள் ஆகியிருக்கும் போல் தெரிந்தது. என் நண்பர்கள் இருவரும் புத்தகத்தை படிக்காதவர்கள். அவர்கள்  என்னுடைய ஆர்வக்கோளாறு காரணமாக வந்திருந்தார்கள். மேலும் இதில் என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்ற ஒரு ஆர்வமும் சேர்ந்து விட்டிருந்தது. அரங்கம் மிகவும் சாதாராணமாக இருந்தது போல் தான் முதலில் தெரிந்தது. தோட்டா தரணி நம்மை ஏமாற்றி விட்டாரோ என்று நினைக்கும் வகையில் மிகவும் சாதாரணமாக தோன்றியது. 

10 நிமிடங்கள் ஆகி விட்டிருந்தாலும் வந்தியத்தேவன் அறிமுகமாகும் காட்சி அப்பொழுதுதான் வந்தது. திரை அரங்குகளில் பிரபல நடிகர் திரையில் தோன்றும் பொழுது விசிலடிச்சான் குஞ்சுகள் காது கிழிய விசில் அடிப்பார்கள். அது போல் வந்தியத்தேவனுக்கு அடித்தார்கள். எனக்கு விசில் அடிக்க வராத காரணத்தினால் கை தட்டலோடு அடங்கிவிட்டேன். அதற்கு முன்னர் ஆழ்வார்க்கடியான் வரும் பொழுது இதை விட பலத்தமான வரவேற்பு. 

பொன்னியின் செல்வன் புத்தகத்தை பொறுத்த வரை பல முக்கிய கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் கதை மற்றும் சம்பவங்கள் வந்தியத்தேவனை சுற்றியே நடப்பதால் அவரே கதைநாயகன். வந்தியத்தேவன் கதாப்பாத்திரம் ஏற்றிருப்பவர் புது முகமானாலும் தனது இயல்பான நடிப்பில் மக்களை கவர்கிறார். வசனங்களை பிழையில்லாமல் பேசுவது அவருடைய இன்னொரு ப்ளஸ். ஆனால் பாவம் நாடகம் முழுவதும் ஒரே உடை தான் அணிந்து வருகிறார். 

புத்தகத்தில் வந்தியத்தேவனுக்கு அடுத்து வாசகர்கள் ரசிக்கும் கதாப்பாத்திரமாக ஆழ்வார்க்கடியான் அமைக்கப்பட்டிருக்கும். அதனாலோ என்னவோ ஆழ்வார்க்கடியான் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறார். ஆங்காங்கே ஆழ்வார்க்கடியான் நம்மை கிச்சு கிச்சு மூட்டினாலும் அவருடைய வைணவ சண்டைகள் ஒன்றிரண்டை சேர்த்துவிட்டிருக்கலாம் என்பது என்னுடைய அபிப்ராயம். மேலும் ஆழ்வார்க்கடியானே குடந்தை ஜோதிடராக நடித்து ரசிகர்களை மேலும் குழப்புகிறார். புத்தகத்தில், சிவன் கோவிலின் மதிலில் அமர்ந்திருக்கும் காக்கை தனது தலையில் கல்லை தூக்கி போடும் பொழுது கூட வலியை பொறுத்து கொண்டு காக்கையை பார்த்து அப்படித்தான், சிவன் கோவிலை இடி என்று கூறுவார் ஆழ்வார்க்கடியான். ஆனால் நாடகத்தில் அவர் சிவனின் திருநீரை தனது நெற்றியில் அவரே தடவிக்கொண்டு குடந்தை ஜோதிடராக மாறுகிறார். புத்தகம் படிக்காதவர்கள் குழம்புகிறார்கள்.

நீண்ட வலைப்பதிவாக இருப்பதால் இரண்டாக பிரித்து எழுதுகிறேன்.. 

Monday, June 9, 2014

ப்ளைமவுத் (Plymouth) மற்றும் அம்பாசடர் (Ambassador) கார்கள் - I

இன்றைய உலகத்தில் ஏதோ ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம் மாதத்திற்கு ஒரு முறை புதிய கார் ஒன்றை நமது சந்தையில் அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிறது. இந்தியா உலக தாரளமயமாக்கல் (Globalisation) கொள்கைகளை கடைப்பிடிக்கும் முன்னர் நிலைமை இப்படி இருந்து விடவில்லை. இன்று தான் ஆடியும் (Audi) பென்சும் (Benz) நமக்கு சர்வ சாதரணமாக போய்விட்டது. 30-40 வருடங்களுக்கு முன்னர் அம்பாசிடரும் பத்மினியும்(அட காரு பேருங்க!!) தான்.

அம்பாசிடர் காரை உபயோகபடுத்தாத அன்றைய பிரபலங்கள் இல்லவே இல்லை என்று கூறுமளவிற்கு அம்பாசிடர் கார் பிரபலமாக இருந்து வந்தது. மிக சமீபமாக தான் அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நம்மாட்களுக்கு உள்ளூர் பொருட்களை விட வெளிநாட்டு பொருட்களின் மேல் உள்ள மோகம் மற்றும் வெளியூர் சந்தை பொருட்கள் தரமானது என்ற நினைப்பே மிக முக்கிய காரணம்.

இன்று எப்படி பெராரி ரக கார்களும் ஹம்மர் கார்களும் பிரபலங்களால் இறக்குமதி செய்யபடுகின்றனவோ அதை போல் அந்நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் பிளைமவுத் கார்கள் ஆகும். எம்.ஜி.ஆர் முதல் சிவாஜி வரை அனைவரும் உபயோகபடுத்தியது பிளைமவுத் கார்களே. இவ்விரு கார்களை பற்றிய ஒரு சிறு பதிவே இது.




முதலில் உள்ளூர் சரக்கு அம்பாசிடர். :)

சிறிது காலமாக தான் இந்தியாவின் பிரதமரும் ஜனாதிபதியும் BMW மற்றும் BENZ ரக கார்களை உபயோகப்படுத்துகின்றனர். உங்களுக்கு தெரியுமா. இந்தியாவின் ஜனாதிபதி பயன்படுத்துவது Mercedes Benz S600 ரக கார். 




அதற்கு முன் Mercedes-Benz W140



அடுத்து பிரதமருக்கு வருவோம். இந்திய பிரதமர் பயன்படுத்தும் கார் இதோ உங்கள் பார்வைக்கு (BMW 7 Series)




நமது நாட்டின் பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் உபயோகப்படுத்தியவை அம்பாசிடர் கார்களே. அம்பாசிடர் கார்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள் போதுமானதாக இல்லை என்று கூறி BMW கும் Benz கும் தாவிவிட்டார்கள். பிரதமரை பாதுகாக்கும் சிறப்பு படையினர் கூட BMW ரக கார்களை தான் பயன்படுத்துகின்றனர்.

அம்பாசிடர் ரக கார்கள் ஹிந்துஸ்தான் மோட்டார் கம்பெனியால் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அம்பாசிடர் கார்கள் இந்தியாவிலேயே அசெம்பிள் (Assemble) செய்யப்பட்டு விற்கப்பட்டு வந்ததே தவிர அதனுடைய வடிவம் (Design) Morris Oxford III ரக கார்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒன்றாகும். முதல் முறையாக இந்த கார் குஜராத்தின் ஓகா துறைமுகத்தில் அமைந்திருந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டது.

 எவ்ளோ அடிச்சாலும் தாங்க கூடிய வடிவத்தை கொண்டிருந்ததால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது. தொழிலதிபர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் கார்களாக இருந்து வந்தது. எனினும் மத்திய தர குடும்பங்கள் வாங்கும் அளவிற்கு விலை நிர்ணயிக்கபடாததால் விற்பனையில் சற்றே தொய்விருந்தது. எனினும் அன்றைய நாட்களில் கார் என்றாலே அம்பாசிடர் தான். வேறு எந்த ஒரு நிறுவனமும் இந்த அளவிற்கு வளர்ந்து விடவில்லை. Premier நிறுவனத்தின் Padmini ரக கார்கள் சற்று போட்டியை கொடுத்து வந்தது.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசிடர் கார்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் செய்து விடவில்லை. கரப்பான் பூச்சி எப்படி கோடி கணக்கான வருடங்களாக அப்படியே இருக்கிறதோ அதே போல் தான் அம்பாசிடரும் இருந்து வந்தது. Analogy கூற வேறு ஒன்றும் தெரியவில்லை. :)

80 களின் இறுதியில் அம்பாசிடரின் வீழ்ச்சி ஆரம்பித்தது. மாருதி நிறுவனம் ஜப்பானின் சுசுகி (Suzuki) நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த 800 ரக காரை களத்தில் இறக்கியது. முதன் முறையாக அம்பாசிடரின் விற்பனை எண்ணிக்கை குறைந்தது. கார் ஆட்டோமொபைல் சந்தையில் முடி சூடா மன்னனாக விளங்கிய அம்பாசிடருக்கு வில்லனாக மாருதி 800 வந்தது.

90 களின் இறுதியில் மத்திய அரசாங்கம் உலகமயமாக்கல் கொள்கை கொண்டு வந்தவுடன் மேலும் பல நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை இந்திய சந்தையில் தொடங்கி விடவே, அம்பாசிடர் பெரும் வீழ்ச்சியை கண்டது. மிகவும் தாமதமாக விழித்து கொண்ட ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் சில மாற்றங்களுடன் அம்பாசிடர் காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. எனினும் வேலைக்கு ஆகாததால் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மே 20, 2014 அன்று அம்பாசிடர் கார் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது.

நான்கு படத்தை போட்டவுடன் அதிகமாக எழுதியதை போல் உள்ளது. எனவே பிளைமவுத் கார்கள் பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில்....