Monday, May 27, 2013

கிருமி கண்ட சோழன் - தொடர்ச்சி

வரலாற்றை சற்றே உற்று நோக்கினால் ராஜேந்திரனும் அவரது புதல்வர்களும் வைணவ நெறிகளை வெறுத்து ஒதுக்கியதாக வரலாற்று ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. எனவே நமது பட்டியல் மேலும் சுருங்குகிறது. நமது முன் எஞ்சியிருப்பவர்கள் அதி ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமன்  மற்றும் இரண்டாம் குலோத்துங்கன்.

இந்நால்வருள் அதி ராஜேந்திரனின் மரணத்தைப்பற்றி ஏற்கனவே ஒரு வலைப்பூ எழுதப்பட்டுள்ளது. அரியாசனத்தில் அமர்ந்து சில திங்கள்களே ஆட்சியில் இருந்தான். இவனது ஆட்சிக்காலத்தில் உள்நாட்டுக்கலவரங்கள் மிகுந்திருந்ததாகவும், அதை கீழை சளுக்க மன்னன் தனது படைகளுடன் வந்திருந்து அடக்கினான் என்றும் அதி ராஜேந்திரனை ஆட்சியில் அமர்த்தினான் எனவும் பில்ஹனர் கூறுகிறார்.

இந்த உள்நாட்டுக்கலவரங்கள் தனக்கு கிடைக்க வேண்டிய வேங்கி நாடு தனக்கு கிடைக்காததால் அநபாயன் (எ) முதலாம் குலோத்துங்கன் செய்த சூழ்ச்சியே என்று கூறப்படுகிறது. மேலும் அவன் மரணத்தை சுற்றியும் மர்மங்கள் நிலவத்தான் செய்கின்றன. கீழை சளுக்கன் தனது மைத்துனனை ஆட்சியில் அமர்த்திவிட்டு 6 மாதங்கள் சோழ நாட்டிலேயே தங்கியிருந்து கலவரங்கள் ஓய்ந்தவுடன் வேங்கி திரும்பினான் என்று கூறப்படுகிறது. அவன் அப்புறம் சென்ற சில நாட்களில் அதி ராஜேந்திரன் இறந்துபட்டான். இம்மரணம் உள்நாட்டுக்கலவரங்களால் ஏற்பட்டிருக்ககூடும் அல்லது அநபாயனின் சூழ்ச்சியால் நிகழ்ந்திருக்கலாம் அல்லது இயற்கையாகவே மரணம் சம்பவித்திருக்கலாம்.

உள்நாட்டு கலவரங்கள் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் இரண்டாக இருக்கலாம்.
ஒன்று, சோழ நாட்டுடன் தங்களை இணைத்துக்கொண்டு அரசனுக்கு கப்பம் செலுத்தி வந்த சிற்றசர்களுள் சில பேர் அரசனுடைய முடிவுகளிலோ அல்லது கொள்கைகளிலோ மாறுபட்டிருக்கலாம். அதனால் உள்நாட்டு கலகம் நிகழ்ந்திருக்கலாம்.

இரண்டு, மத நெறிகளில் மன்னன் கடைப்பிடித்த கொள்கைகள் காரணமாக இருக்கலாம். பன்நெடுங்காலம் கடந்த பின்பும் இந்த அவல நிலை தொடர்கிறது. மத நெறிகள் என்று பார்த்தோமானால் அக்காலகட்டத்தில் இருந்த மதங்கள் அல்லது நெறிகள் இரண்டே இரண்டு தான். சைவமும் வைணவமும். பௌத்தம் இருந்து வந்தாலும் பெரும்பான்மையை இழந்து சிறுபான்மையராய் இருந்து வந்த காலம் அது.

இரண்டாவது காரணத்தின் படி பார்த்தால், சைவர்களும் வைணவர்களும் கிளர்ச்சியுற்று உள்நாட்டுகலகம் நிகழ்ந்து, மன்னன் அதை அடக்க முன்வந்து ஒரு தலை பட்சமாய் நடந்திருந்து மற்றொரு தரப்பினிடம் எதிர்ப்பை சம்பாதித்திருக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு, அத்தரப்பினர் மன்னனை சதியில் வீழ்த்தியிருக்கலாம்.

அல்ல இப்படியும் இருக்கலாம். இது ஒரு மித மிஞ்சிய கற்பனையாகக்கூட இருக்கலாம். தங்கள் தரப்பில் வாதாடிய மன்னர் இச்சமயம் மாண்டால் பழியை மற்றொரு தரப்பினர் மீது போட்டுவிட்டு அவர்களை இல்லாமல் செய்துவிடலாம் என்று கூட எண்ணியிருக்கலாம். அரசியலில் சூழ்ச்சிகளுக்கும் கொலைகளுக்கும் பஞ்சமில்லை. இதை சற்றே உற்று நோக்கினால், ராமானுஜர் சம்பவத்துடன் ஒற்றுப்போவது தெரியும்.

இதுவாக இருக்கலாம் என்பது என்னுடைய பார்வை. கவிகளும் ஆய்வாளர்களும் கல்வெட்டுகளும் நமக்கு உண்மையை தெளிவாக உரைக்கவில்லை. எனவே நமது கற்பனையை சற்றே தூண்டிவிட வேண்டியதிருக்கிறது.

எதைப்பற்றி வேண்டுமானால் தவறாக எழுதலாம். ஆனால் வரலாற்றை பற்றி எழுதும் பொது ஒருவன் கவனத்துடன் இருப்பது நல்லது. புகழ்ப்பெற்ற மன்னர்களை மக்கள் முன் குற்றவாளிகளாக முன் நிறுத்தமுடியாது. இவ்வலைப்பூவில் கூறப்பட்டிருப்பது எனது எண்ணங்களே ஆகும். வாசகர்கள் மனம் கோணாதபடி எழுத முயற்சிக்கிறேன்.

கிருமி கண்ட சோழன் குலோத்துங்கனாக இருக்குமோ என்பதை பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில்...

No comments:

Post a Comment