Wednesday, October 9, 2013

அதி ராஜேந்திரன் மரணம் – குலோத்துங்கன் காரணமா?

வரலாற்றில் சில மரணங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. உதாரணமாக ஆதித்யகரிகாலன் மரணத்தை கூறலாம். இதைப்பற்றி பல ஆசிரியர்கள் பற்பல விதமாக தங்கள் கற்பனைக்குதிரைகளை தட்டி தேவையானஅளவிற்கு எழுதிவிட்டனர். சில மரணங்கள் நமது பார்வையிலிருந்து விலகி விடுகின்றன. சில மரணங்களைப்பற்றி கதாசிரியர்கள் விளக்காமல் விட்டுவிடுவதுண்டு. சிலர் பட்டும் படாமல் எழுதுவர். இதில் அதிராஜேந்திரன் மரணமும் ஒன்று. இதைப்பற்றி ஏற்கனவே மற்றுமொரு மரணம் என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். எனினும் நீண்ட நாட்களுக்கு பிறகு நீலகண்ட சாஸ்த்ரிகள் எழுதிய சோழர்கள் புத்தகத்தை வாசித்தேன. வாசிக்கும் பொழுது என்னவோ தெரியவில்லை முதலாம் குலோத்துங்கரை பற்றி வாசிக்கவே தோன்றியது.

நம்மில் பெரும்பாலானோருக்கு சோழர்கள் என்றால் முதலாம் ராஜராஜரையும், முதலாம் ராஜேந்திரரையும் மட்டுமே பரிச்சயமாக உள்ளனர். ஆனால் இவர்களை தாண்டி சோழ நாட்டில் மேலும் சில புகழ் வாய்ந்த மன்னர்கள் இருந்துள்ளனர். என்னுடைய பார்வையில் மேற்கூறிய இருவருக்கடுத்து முதலாம் குலோத்துங்கரையே மிகவும் சிறந்தவர் என்று கூறுவேன்.

இப்பொழுது எனது மனதில் என்ன தோன்றுகிறது என்பதை வெளிப்படையாக கூறி விடுகிறேன். இந்த வலைத்தொடரயாவது முழுமையாக எழுதி முடிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். தில்லை கோவிலைப்பற்றி எழுதிய வலைகளுக்கு பெரியதாக யாரும் படித்துவிடவில்லை. எனினும் எனது வலைகளில் சங்கதாரா பற்றிய விமர்சனமும், கலிங்கத்துப்பரணி பற்றிய முன்னுரையும் பெருவாரியான மக்கள் படித்திருக்கின்றனர் (நூறு என்பதே என்னைப் பொருத்தவரை பெருவாரியான மக்கள் தான். J)

குலோத்துங்கரின் இளமை எப்படி கழிந்தது என்பதை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். எனினும் சோழர்கள் புத்தகத்தை வாசிக்க தொடங்கியவுடன் மேலும் சுவை மிகுந்த பல தகவல்கள் கிடைத்தன. அதில் சிலவற்றை தங்களுடன் பகிர்ந்து கொண்டு இந்த வலையை நிறைவு செய்து விடுகிறேன்.

தனது தந்தை ராஜராஜ நரேந்திரர் இறந்தவுடன் வேங்கியின் அரசபீடத்தில் அமர்ந்தான் இருபது வயதே நிரம்பிய அபயன் என்கிற ராஜேந்திரன் (குலோத்துங்கரின் இள வயது பெயர்கள்). மற்றொரு வலையில் இவரது சிற்றப்பன் விஜயாதித்யன் இவரிடம் ஆட்சியை பறித்ததாக கூறியிருந்தேன். ஆனால் நீலகண்டர் குலோத்துங்கரே விரும்பி தனது சிற்றப்பனிடம் ஆட்சியை ஒப்படைத்ததாக கூறுகிறார். (பார்க்க பக்கம் எண்: 309 ஆங்கிலம்)

இதற்கு காரணமாக நீலகண்டர் கூறுவது இரு காரணங்களாகும்.
முதலாவது, வீரராஜேந்திரருக்கு பிறகு சோழ அரியணையில் வீற்றிருக்க போவது தானே என்கிற எண்ணம் குலோத்துங்கருக்கு வந்திருக்கவேண்டும் எனவும் அதற்கு உகந்தவாறு தன்னை மாற்றிக்கொள்ள இந்த காலத்தை உபயோகித்திருக்கக்கூடும் என்பது அவரது வாதமாக இருக்கிறது.

இரண்டாவதாக, மேலை சளுக்க மன்னரான விக்ரமாதித்யனின் வேங்கி மற்றும் சக்கரகோட்டத்தின் படையெடுப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். புரியும் படி சொல்லவேண்டுமென்றால், விக்ரமாதித்யன் ஒரே சமயத்தில் கிழக்கு முகமாக வேங்கியையும் வடகிழக்கு முகமாக சக்கரகோட்டத்தையும் நோக்கி வந்திருந்தால், வேங்கி நாட்டு படைகள் சக்கரகோட்டத்தை நோக்கியும், சோழ படைகள் வேங்கியை நோக்கியும் நகர்ந்திருக்கக்கூடும். வேங்கி நாடு சக்கரகோட்டத்தை தனது வடஎல்லையாய் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடரும்...

இதற்கு பிறகு நடந்த சில விஷயங்கள் தான் மேலை சளுக்கத்துக்கும் சோழர்களுக்கும் நடந்த தீராப்பகையை முடிவுக்கு கொண்டு வந்தது. அது பற்றியதே அடுத்த வலைப்பதிவு.

No comments:

Post a Comment