Wednesday, October 16, 2013

சோழர்களுக்கும் மேலை சளுக்கதுக்குமான பகை – பகுதி ஒன்று

சோழர்கள் தங்கள் பரம வைரிகளாக கருதியது பாண்டியர்கள் என்றாலும் மேலைச்ச்சளுக்கர்களும் அவர்களது பரம எதிரிகளே. பாண்டியர்களுடனான இவர்களது விரோதம் நூற்றாண்டுகளை கடந்து தொடர்ந்தது என்றாலும் சளுக்கர்களுடனான பகை 100-120 ஆண்டுகளே நீடித்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் உத்தம சோழரின் காலத்திலிருந்து வீர ராஜேந்திரரின் காலம் வரை இந்த பகை நீடித்தது. இதில் மிகுந்த சுவாரசியமான விடயம் என்னவென்றால் வீர ராஜேந்திரர் தனது மெய்க்கீர்த்தியில் ஐந்து முறை மேலைச்ச்சளுக்கம் தன்னிடம் புறங்கண்டதாக குறிப்பிடுகிறார். இவரது காலத்தில்தான் இந்த பகை முடிவுற்றது. இதை அடுத்து வரும் பகுதிகளில் விளக்குகிறேன்.

முதலாம் பராந்தகரின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் ராட்டிரக்கூடர்களின் படையெடுப்பால் சோழ நாடு தனது வடக்கு பகுதிகளில் சிலவற்றை இழந்தது. காலஹத்தி வரை நீண்டு பரந்திருந்த சோழ நாடு ராட்டிரக்கூடர்களின் படையெடுப்பிற்கு பிறகு தனது வடஎல்லையாக திருவொற்றியூரை கொண்டிருந்தது. ராட்டிரக்கூடர்களிடம் கப்பம் செலுத்தும் சிற்றரசாக மேலை சளுக்கர்கள் அந்த சமயத்தில் இருந்தனர். மூன்றாம் கிருட்டினர் ராட்டிரக்கூடர்களின் அரசராக இருந்தார். மேலை சளுக்கம் இரண்டாம் தைலபரை அரசராக கொண்டிருந்தது.

அரிஞ்சயரும், சுந்தர சோழரும் சோழர்களை தோல்வியிலிருந்து சிறிது சிறிதாக மீட்டெடுத்தனர். இதற்கு பெரும் துணையாக இருந்தது ராட்டிரக்கூடர்களுக்கு பல பக்கங்களில் இருந்து இன்னல்கள் வந்ததே காரணம். மூன்றாம் கிருட்டினருக்கு பிறகு சரியான ஆளுமை இல்லாததாலும், வடக்கு எல்லையில் மாளவ நாட்டின் தொடர் படையெடுப்பாலும் அவர்கள் உருக்குலைந்தனர். இரண்டாம் கர்க்கர் (Karka II)  ஆட்சிக்காலத்தில் ராட்டிரக்கூடர்களின் நிலை இன்னும் மோசமடைந்தது. இதை பயன்படுத்திக்கொண்ட இரண்டாம் தைலபர் இரண்டாம் கர்க்கரை கொன்று மேலை சளுக்க அரசை மீண்டும் நிறுவினார்.

அரசை மீண்டும் நிறுவியதோடல்லாமல், நாட்டின் எல்லைகளை விரிவுப்படுத்த முற்பட்டார். அவர் தனது பிரதான எதிரியாக கருதியது ராட்டிரக்கூடர்களுக்கு பிறகு சோழர்களே. ஒரு எதிரி அழிந்த பின் மற்றொரு எதிரி மீது கண் பதிவது வியப்பல்லவே. சோழ நாடு இரண்டாம் தைலபரின் காலத்தில் மிக உன்னதமான நிலையில் இருந்தது என்று கூறமுடியவில்லை. ஏனெனில் அப்பொழுது ஆட்சியில் இருந்தது உத்தம சோழர்.

சோழ நாட்டின் மீது படையெடுத்த தைலபர் அதில் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்ததாக கூறலாம். இந்த படைஎடுப்பைப்பற்றி எந்த குறிப்புகளும் நீலகண்டரின் “சோழர்கள் புத்தகத்தில் எனக்கு புலப்படவில்லை. இந்த படையெடுப்பும் ராஜராஜர் ஆட்சிக்கட்டிலுக்கு வருவதை துரிதப்படுத்தியிருக்க வேண்டும். இந்த போர் கி.பி 980 ஆம் ஆண்டு நடந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

ராட்டிரக்கூடர்களின் படையெடுப்பில் இருந்து சோழ நாடு முழுமையாக மீள்வதற்குள் பாண்டிய நாட்டின் கலகம், தைலபரின் படையெடுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது. இப்பாதிப்புகளிளிருந்து சோழ நாடு முழுமையாக மீண்டது ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில்தான். தைலபரின் கையில் தோல்வியை தழுவிய உத்தம சோழர் கி.பி 985 ம் ஆண்டு உயிர் துறந்தார். அதன் பிறகு சோழ நாடு தனது வரலாற்றின் போற்றத்தக்க அரசரை தனது சிம்மாசனத்தில் ஏற்றியது.

அருமொழிவர்மர் ஆட்சிக்கட்டிலில் ஏறியவுடன் மேலை சளுக்கர்களுடன் போரிடாமல் தெற்கு பகுதியில் ஏற்பட்ட பாண்டிய நாட்டு கலகங்களிலும், வரலாற்றில் இன்னும் ஆய்வாளர்களுக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும் காந்தளூர் படையெடுப்பிலும் தனது கவனத்தை செலுத்தினார். இந்த காலக்கட்டத்தில் இரண்டாம் தைலபர் இறந்துவிட சத்யாஸ்ரேயர் ஆட்சிக்கு வந்தார். காந்தளூர் படையெடுப்பு முடிந்தவுடன் சோழ நாடு தனது தகுதிக்கு சமமான சளுக்கர்களை சந்திக்க தன்னை தயார்ப்படுத்திக்கொண்டது.

தொடரும்..

No comments:

Post a Comment