Sunday, January 26, 2014

கடல் கோட்டை – புத்தக விமர்சனம்

இப்பொழுதெல்லாம் சிறிய புத்தகங்களை மனம் வாங்க மறுக்கிறது. குறைந்த பட்சம் 600 பக்கங்கள் இருந்தால்தான் இரு வாரங்களாவது தாக்குபிடிக்கிறது. மேற்கூறிய இரண்டையும் பூர்த்தி செய்தது உதயணின் கடல் கோட்டை புத்தகம். எனவே அப்புத்தகத்தை புத்தக கண்காட்சியில் வாங்கினேன். முன்னுரையை படித்தபோதே ஒரு அசாதரணமான தகவலை படிக்க நேரிட்டது. இதுவரை சோழ மன்னர்கள் மட்டுமே கடல் தாண்டி தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்ததாக எண்ணியிருந்தேன். பல்லவர்களும் கடல் ஆதிக்கத்தை செலுத்தியவர்கள் என்பதே புதிய தகவலாக இருந்தது.


புத்தகம் அராபியர்களையும் திபெத்தியர்களையும் பல்லவ மன்னர் ராஜசிம்மன் வெற்றி கொண்டதை பற்றியது. அனைத்து வரலாற்று புதினங்களை போலவே இந்த புத்தகத்திலும் மன்னர் நாயகன் அல்ல. ஒரு உபதளபதி தான் கதை நாயகன். நாயகிகளும் ஒருவருக்கு மேற்ப்பட்டவர்கள். J


புத்தகம் இரு பாகங்களை கொண்டது. முதல் பகுதி பல்லவ சாளுக்கிய போரை பற்றியது. முதல் பாகத்தின் முதல் 50 பக்கங்கள் மித வேகத்தில் போனாலும் அதை அடுத்து வரும் பக்கங்கள் மறக்கடிக்க செய்கின்றன. சாண்டில்யன் கடைபிடிக்கும் அதே நடையை உதயணனும் பின்பற்றயிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு சஸ்பென்ஸ். கதை நாயகன் கடைப்பிடிப்பதாக கூறப்படும் வியூகங்கள் அடுத்து என்ன நடக்கும் என்று நம்மை நகம் கடிக்க வைக்க செய்கின்றன.


இரு நாயகிகள் முதல் பாகத்தில். ஒரு சில அத்தியாயங்களில் மட்டும் தலை நீட்டுகிறார்கள். முதல் பாகம் விறுவிறுப்பாக செல்கிறது. ஆசிரியர் தனது திறமைகள் அனைத்தையும் முதல் பாகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.


இரண்டாம் பாகம் பல்லவர்கள் அராபியர்களையும் திபெத்தியர்களையும் வெற்றி கொள்வதை பற்றி என்று வாசகர்கள் நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. புத்தகத்தின் கடைசி 8-10 அத்தியாயங்களே வருகிறது. மற்ற அத்தியாயங்கள் எல்லாம் காதல் ரசத்தாலும் தேவை இல்லாத நிகழ்வுகளாலும் நிரப்பி இருக்கிறார். முதல் பாகத்தில் பரபரவென்று இருக்கும் அத்தியாயங்கள் இரண்டாம் பாகம் முழுவதுமே ஒரு தொய்வுடன் நகர்வதை உணராமல் இருக்க முடியவில்லை.



மேலும் சில இடங்களில் இரண்டாம் ரக வசனங்களையும் காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம். காதல் ரசம் நிரம்பி வழியும் இடத்தில ஆசிரியர் தனது எழுத்துக்களை இன்னும் சற்று கவனத்துடன் கையாண்டிருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து. எனினும் 1000 பக்கங்களை கொண்ட ஒரு புத்தகத்தை கதாசிரியர் எழுதும் பொழுது ஆங்காங்கே ஒரு சில குறைகள் ஏற்படுவது சகஜமே. புத்தகத்தின் முக்கியமான நிறையாக முதல் பாகத்தையும், குறையாக இரண்டாம் பாகத்தின் தொய்வு நிறைந்த சில அத்தியாயங்களை கூறலாம். எனினும் கொடுத்த விலைக்கு இப்புத்தகம் நிறைவு தருகிறது. J

No comments:

Post a Comment